சனி, 21 மார்ச், 2015

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி
இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது.
இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும். கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு.
கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும். ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.
இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு. குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய்களைப் போக்கும். கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.
தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும். கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும். இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர்.
இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும். இது பழங்கால பாட்டி சொன்ன வைத்தியமாகும்