செவ்வாய், 23 ஏப்ரல், 2013

மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்!

கணினிகள் , மடிக்கணினிகள், மின் இசைக் கருவிகள், செல்போன்கள், காமிராக்கள், டேப்ரிக்கார்டர்கள், பென்டிரைவ்கள், பிளாப்பிகள், சிடிக்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கால்குலேட்டர்கள்,தொலைபேசிகள், தொலை நகலிகள், கைக்கடிகாரங்கள், மின்னணுப் பலகைகள், அச்சிடும் கருவிகள், மின் கலங்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணுக் கருவிகளிலிருந்து ஒதுக்கப்படுவைகள் மின்னணுக் கழிவுகள் ஆகும்.

சென்ற நூற்றாண்டின் இறுதியில் மின்னணுத் தொழிற்சாலைகள் மற்றும் மின்னணுப் பொருட்களின் உற்பத்தி மிக வேகமாக வளர்ந்தது. பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்டது. நுகர்வோர்களை குறிவைத்து தயாரிப்புகள் செய்யப்பட்டன.

நோக்கியோ , சாம்சங் , சோனி எரிக்சன், மோட்ரோலா, சோனி முதலிய பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவிலுள்ள டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து மின்னணுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றன.

இந்தியாவில் எதிர்வரும் பத்தாண்டுகளில் 500% மின்னணுக் கழிவுகள் அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகள் உருவாக்கப்படுகிறது. மின்னணுக் கழிவுகளின் அளவு இன்னும் சில ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஓர் ஆண்டில் மட்டும் 1200 மெட்ரிக் டன்கள் எலெக்ட்ரானிக் கிராப் உருவாக்கப்படுகிறது. பெங்களுரில் மட்டும் ஆண்டுக்கு 8000 மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகள் வெளியிடங்களில் கொட்டப்படுகிறது.

சீனா, தாய்லாந்து முதலிய நாடுகளிலிருந்து கிடைக்கும் மலிவான மின்னணுப் பொருட்கள், இந்தியாவிற்குள் அதிக அளவில் தாராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது. மலிவு விலைக்கு வாங்கப்படும் இப்பொருட்கள் குறைந்த காலங்களிலேயே மின்னணுக் கழிவுகளாகி விடுகின்றன.

உபயோகமற்ற மின்னணுக் கழிவுகளிலிருந்து அபாயகரமான நச்சுப் பொருட்கள் வெளியேறி, மனிதர்களுக்கு புற்று நோய், நரம்புத் தளர்ச்சி, கண் பார்வைக் குறைபாடு முதலிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும், மின்னணுக் கழிவுகள் மண்ணையும் , நீரையும், காற்றையும் மாசடையச் செய்கின்றன.

மின்னணுக் கழிவுகளில் நச்சுத் தன்மையுள்ள காரீயம், பாதரசம், குரோமியம், இரும்பு, காப்பர், அலுமினியம், தங்கம் முதலிய உலோகங்கள் கலந்து உள்ளன.

காப்பரிலிருந்து ‘ டையாக்சின் ‘ என்னும் நச்சுப் பொருள் வெளியாகிறது. இதனால் காற்று மாசடைகிறது. கணினிகள் மற்றும் எலெக்ட்ரிக் பொருட்கள் ‘டாக்சி சையனைடு‘ என்னும் நச்சுப் பொருளை வெறியேற்றுகிறது.

மின்னணுக் கழிவுகளில் உள்ள பாதரசம், மனிதனின் நினைவுகளை பாதிப்படையச் செய்கிறது. தசைகளை பலகீனப் படுத்துகிறது. விலங்குகளின் உயிர்களுக்கு உலை வைக்கிறது. கருவுருதல், இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது.

மின்னணுக் கழிவுகளில் கலந்து உள்ள ‘ சல்பர் ‘மனிதர்களின் கல்லீரல், இதயம், கண், தொண்டை, நுரையீரல், நரம்பு முதலியவற்றை சீர்கேடு அடையச் செய்கிறது.

புதுடெல்லி, பெங்களூர், சென்னை, மும்பை முதலிய பெருநகரங்களில் மின்னணுக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. கங்கை நதியும் மின்னணுக் கழிவுகளிலிருந்து தப்பவில்லை. மின்னணுக் கழிவுகளை எரிப்பதால் காற்று மண்டலம் பாதிக்கப்படுகிறது. மின்னணுக் கழிவுகளால் நிலத்தடி நீர் மிகவும் பாதிப்படைகிறது. மின்னணுக் கழிவுகள் மக்கும் தன்மையற்ற திடக்கழிவுகளாக உள்ளதால் சுற்றுச் சூழலின் தன்மையையும், எழிலையும் சீரழிக்கிறது.

மின்னணு பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது, இந்தியாவில் எதிர்காலத்தில் சுற்றுச் சூழல் பாதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

மின்கலம் (பேட்டரி) பயன்படுத்திய பின்னர் குப்பையில் தூக்கி வீசப்படுகின்றன. மின்கலத்தில் உள்ள உலோகத்துகள்களானது நிலத்திற்குள் ஊடுருவி நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. மின்கலங்களை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது.

அய்ரோப்பிய யூனியன் 2005 ஆம் ஆண்டு ஒரு திடக்கழிவுச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி பயன்படுத்த முடியாத மின்னணு சாதனங்களைச் சேகரிப்பது, மறு சுழற்சி செய்வது மற்றும் கழிவுகளை அகற்றுவது முதலியவைகளை, அந்த சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பொறுப்பாகும். மேலும், இந்தப் பணியை உள் நாட்டிலேயே செய்ய வேண்டும். இந்த அபாயகரமான மின்னணுக் கழிவுகளை, பயன்படுத்த முடியாத சாதனங்களை வேறு எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா மின்னணுக் கழிவுகளை உருவாக்கும் உலகத் தலைவனாக உள்ளது. மேலும், உலக அளவில் 80% மின்னணுக் கழிவுகளை அமெரிக்கா கொட்டுகிறது. அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகளை ஏற்படுத்துகிறது . அமெரிக்காவில் ஆண்டு ஒன்றுக்கு 30 மில்லியன் கணினிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

உலகில் பல நாடுகள் மின்னணுக் கழிவுகளை தாங்களே மறு சுழற்சி செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், இக்கட்டுப்பாடுகளை அமெரிக்கா தனது காலில் போட்டு மிதிக்கிறது. மென் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை அதிகம் கொண்ட அமெரிக்காவில் தான் மின்னணுக் கழிவுகள் சேருவதும் அதிகம். மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் விளைவுகளை அறிந்துள்ள அமெரிக்கா அதனை வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்துவிட்டு, தனது நாட்டின் சுற்றுச் சூழலை காப்பாற்றிக் கொள்வதில் உறுதியாக உள்ளது. மேலும், தொண்டு நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும். அறக்கட்டளைக்கும் உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு , இந்தியா போன்ற நாடுகளுக்கு பழுதடைந்த மற்றும் செயல்திறன் குறைந்த கணினிகளையும், பிற மின்னணுப் பொருட்களையும் அனுப்பி வருகின்றது. பேசில் ஒப்பந்தத்தில் (Basel Agreement) அமெரிக்கா கையொப்பமிட மறுத்துவிட்டது.

ஓரு கணினியில் 1000- க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளது. அதில் 50 பொருட்கள் நச்சுத் தன்மை கொண்ட உலோகங்களாலும், கலவைகளாலும் ஆனது. பழுதடைந்து கணினிகளிலிருந்தும், அதன் பாகங்களிலிருந்தும் நச்சு கசியத் துவங்குகிறது.

சென்னை துறைமுகத்தில் வருமானவரி அமலாக்கப் பிரிவினர் நடத்திய சோதனையில், பல கன்டெயினர்களில் காலாவதியான கணினிகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் ஆஸ்திரேலியா , கனடா, கொரியா, புருனே முதலிய நாடுகளிலிருந்து விதிமுறைகளை மீறி கொண்டு வரப்பட்டது.

இந்தியக் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக தமிழகக் கடலோரப் பகுதிகளில் மின்னணுக் கழிவுகள் அதிகம் கொட்டப்படுகிறது. இந்தியாவை மின்னணுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மேலை நாடுகள் மாற்றிவருகின்றன.

மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும் தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மறு சுழற்சியில் ஈடுபடுபவர்கள், உபயோகிப்பாளர்கள் முதலியோர் இணைந்து செயல்பட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்திட உபயோகிப்பாளர்களிடம் கணினிகளுக்கு 3.94% லிருந்து 5.95% வரையும், தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 3.4% லிருந்து 5% வரையும், செல் போன்களுக்கு 3.4% லிருந்து 5% வரையும் சேவைத் தொகை, விலையுடன் சேர்த்து வாங்கப்படுகிறது. ஆனால், மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் ஈடுபடுவதில்லை.

மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணியில் புதுடெல்லியில் மட்டும் 30, 000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நவீன இயந்திரங்கள் இல்லாமல், பாதுகாப்பு கருவிகள் இல்லாமல், வெறுமனே சுத்தியல் , திருப்புளி கொண்டு பெண்களும், குழந்தைகளும் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது உடலில் காயங்கள் ஏற்படுதல், உடல் நல பாதிப்புகள் அடைதல், காற்றோட்டமில்லாத சூழல், முகம் மூடுவதற்கு மாஸ்க் , முகமூடிக்கவசம் முதலியவைகள் இல்லாதது. உயர் தொழில் நுட்ப நவீன கருவிகள் வழங்கப்படாதது முதலிய மோசமான நிலைமகள் நிலவி வருகிறது. மேலும், மின்னணுக் கழிவுகளிலிருந்து சில உலோகங்களைப் பிரிப்பதற்கு, சுத்தப்படுத்துவதற்கு வீரியமுள்ள அமிலங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த அமிலங்களினால் மனித உடலிலும், தோலிலும் பாதிப்புகள் உண்டாகிறது.

மின்னணுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், நகராட்சி அமைப்பினர், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் , கொள்கை வகுப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மின்னணுக் கழிவுகள் மேலாண்மை குறித்து திட்டமிட வேண்டும். மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு தகுந்த முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

நச்சுத் தன்மையுள்ள மின்னணுக் கழிவுகள் குறித்தும் சுற்றுச் சூழல் பாதிப்பு மற்றும் மனித உடலநலப் பாதிப்புகள் குறித்தும் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் மின்னணுக் கழிவுகள் குறித்து சட்டங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தெளிவாக ஏற்படுத்தப் படவேண்டும்.

மின்னணுக் கழிவுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்திட , மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம், மாநில அரசின் மாசுகட்டுப்பாட்டு வாரியம் முதலியவற்றின் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் நிறுவனங்கள் அனைத்தையும் மத்திய சுற்றுச் சூழல் கட்டப்பாட்டு வாரியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் மத்திய சுற்றுச் சூழல் கட்டுப்பாட்டு வாரியம் உதவி புரிந்திட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு தேசிய, மாநில அளவிலான செயல்பாட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும்.

இந்திய சுற்றுச் சூழல் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்ப தொழிற்கழகம், தகவல் தொழில் நுட்பத் துறை, தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் முதலிய அமைப்புகள் இணைந்து மின்னணுக் கழிவுகளை அழிப்பதற்கும் , மறு சுழற்சி செய்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் வழிகாட்டுதல் அளித்திட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றவும், மறு சுழற்சி செய்யவும், அதில் உள்ள உலோகப் பொருட்களை பிரித்தெடுப்பதற்கும், அந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சியும், விழிப்புணர்வும் கிடைக்கச் செய்திட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை அழிப்பதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் மத்திய , மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்கிட வேண்டும்.

மின்னணுக் கழிவுகள் பிற நாடுகளிலிருந்த கடத்தி வரப்படுகிறதா? என்பதை நாட்டு எல்லைகளிலும், கடலோரங்களிலும் தீவரமாக கண் காணித்திட வேண்டும்

மின்னணுக் கழிவுகளை அழிப்பதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும் தயாரிப்பாளர்களே முழு பொறுப்பாக்கப்பட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை அகற்றவும், அழிக்கவும் பொது அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் , தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கும், மறு சுழற்சி செய்யாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

மின்னணுப் பொருட்கள் தயாரிப்புகளில், மிகவும் அதிக நச்சுத் தன்மை கொண்ட காரீயம், பாதரசம், காட்மியம், குரோமியம் முதலிய உலோகங்கள் பயன்படுத்துவதை குறைத்திட வேண்டும்.

பழைய மின்னணுப் பொருட்களை கொடுத்து, புதிய பொருட்கள் வாங்குபவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும். பழைய மின்னணுப் பொருட்கள் சேகரிப்பு மையங்களை அரசு அமைத்திட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை மறு சுழற்சி செய்திடவும், அழித்திடவும் உள்ளாட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளை ஈடுபடுத்திட வேண்டும்.

காரீயம் இல்லாத மின்னணு பொருட்கள், மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும்.

மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து எந்த முறையிலும் மின்னணுக் கழிவுகளை இறக்குமதி செய்யப்படுவதை முற்றும் தடை செய்திட வேண்டும்.

கல்வி நிறுவனங்கள், நூல் நிலையங்கள், அறக்கட்டளைகள், சமுதாய நல வளர்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் முதலியவற்றிற்கு, வெளிநாடுகளிலிருந்து பயன்படுத்தப்பட்ட மின்னணுப் பொருட்களை இறக்குமதி செய்யக் கூடாது என மத்திய அரசு 13-05-2010 அன்று முதல் தடை விதித்துள்ளதை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

பெங்களுருக்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள மின்னணுக் கழிவுகள் மறுசுழற்சி பணிமனையைப் போல் பிற இடங்களிலும் அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் .

மின்னணுக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படச் செய்திட வேண்டும். மின்னணுப் பொருட்கள் விற்பனை பொருட்காட்சிகள் நடத்திட விதிமுறைகள் கடுமையாக்கப் பட வேண்டும். மின்னணுக் கழிவுகளை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மின்னணுக் கழிவுகளை சுத்தப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவர்களை முறைப்படுத்த, பாதுகாத்திட முறையான சட்டம் இயற்றப்பட வேண்டும்.